உலகப்புகழ் பெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் தொடரும் பழமைகளோடு சில புதுமைகளையும் சேர்த்து மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களின் வழிநடத்தலில் இம்முறை அறிமுகமாகியுள்ள சில புதிய அம்சங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

அந்தவகையில் மகோற்சவ காலம் முழுவதும் ஆலயம் நாடி வரும் பக்தர்களுக்கு அடையாத பெருங்கதவோடு அன்னதானம் சிறப்புடன் நடைபெறுவது வழமை. அந்த புண்ணியம் சகலரையும் சேர்வதற்காக பிடியரிசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பக்தர்கள் தங்களால் இயன்ற ஒருபிடி அரிசியேனும் ஆலயத்திற்கு அளிக்க முடியும் என்று கூறப்பட்டதாயினும் அங்கே பெருமளவு அரிசி தொடர்ச்சியாக சேர்ந்தவண்ணம் உள்ளமை அம்பாள் திருவருள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோல அடுத்த தலைமுறையினரை ஆலய வழிபாடுகளில் நாட்டம் கொள்ள வைக்கும் நோக்கில் ஆன்மீகம் சார்ந்த வேடம் பூண்டு அம்பாள் வீதி வலம் வரும்போது குழந்தைகள் வலம் வருவதை காணக்கூடியதாக உள்ளது. திருமுறைத் திருவிழாவில் சமய குரவர்களாகவும், முப்பெரும் தேவியர் திருவிழாவில் அம்பாளின் மூர்த்தங்களாகவும் சிறார்களை குடும்பத்தினர் அழைத்து வந்தனர். திருவிழா முடியும் வரை குழந்தைகள் ஆர்வத்துடன் வீதி வலம் வந்தனர்.]

இவ்வாறு ஒவ்வொரு திருவிழாவும் மிகவும் சிறப்பாக பக்தர்கள் கூட்டத்துடனும் ஆன்மீக நாட்டத்துடனும் நடைபெற்று வருகிறது.

