நவீன கிரிக்கெட்டின் போக்கு அசாதாரணமான இளம் திறமையாளர்களின் வருகையால் அடிக்கடி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய கிரிக்கெட் உலகம் பீகாரைச் சேர்ந்த இடதுகை பேட்டிங் புயலான வைபவ் சூரியவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) அசுர வேக வளர்ச்சியைப் போல ஒரு நிகழ்வை இதற்கு முன்பு பார்த்ததில்லை. பெரும்பாலான பதின்ம வயது சிறுவர்கள் தங்களின் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடங்கும் வயதில், இந்த இளம் வீரர் உயர்தர கிரிக்கெட்டின் எல்லைகளை மீண்டும் வரையறுத்து வருகிறார். வீட்டின் கொல்லைப்புறப் பயிற்சியில் தொடங்கி இன்று ஒரு புகழ்பெற்ற தொழில்முறை ஆட்டக்காரராக மாறியுள்ள அவரது பயணம், சமகால விளையாட்டு வரலாற்றின் மிக உன்னதமான கதைகளில் ஒன்றாகும்.

தொடக்கப் புள்ளியும் அசுர வளர்ச்சியும்
2011 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த சூரியவன்ஷிக்கு, நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. தனது நான்கு வயதுக் குழந்தையின் அசாத்திய ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை, வீட்டிற்குப் பின்னால் ஒரு சிறிய தற்காலிகப் பயிற்சிப் பகுதியை அமைத்துக் கொடுத்தார். இந்த ஆரம்பகால ஆதரவு, இந்த இளம் இடதுகை ஆட்டக்காரருக்கு இயல்பாகவே அச்சமற்ற, ஆக்ரோஷமான பேட்டிங் பாணியை வளர்க்க உதவியது. தனது ஒன்பதாவது வயதில் சமஸ்திபூரில் உள்ள முறையான கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அங்கு அவரது அசாத்திய பலத்திற்கு ஏற்றவாறு பேட்டிங் நுட்பங்களும் மெருகேறின.
உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. தனது 12 ஆவது வயதில், பீகார் 19 வயதுக்குட்பட்டோருக்கான (Under-19) அணிக்காக வினூ மான்கட் தொடரில் விளையாடி, வெறும் ஐந்து போட்டிகளில் கிட்டத்தட்ட 400 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்த அதிரடி ஆட்டம் மூத்த தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக, 1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு புகழ்பெற்ற ரஞ்சி டிராபி (Ranji Trophy) முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இரண்டாவது மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தனது 14 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பே, ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் விளையாடிய மிக இளம் வயது இந்தியர் மற்றும் அந்த வடிவத்தில் அரைசதம் அடித்த மிக இளம் வீரர் ஆகிய வரலாற்றுச் சாதனைகளைத் தன்வசப்படுத்தினார்.
சர்வதேச அரங்கில் அதிர்வலைகள்
சர்வதேச அளவிலான இளையோர் போட்டிகளும், ஐபிஎல் (IPL) ஏலமும் இவரை உலக அரங்கில் வெளிச்சம்போட்டுக் காட்டின. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய அவர், வெறும் 58 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இந்த அதிரடி ஆட்டம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மெகா ஏலத்தில் பெரும் போட்டியை ஏற்படுத்தியது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இளம் வீரரை ₹1.10 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில், வெறும் 14 ஆண்டுகள் மற்றும் 23 நாட்களேயான நிலையில் களமிறங்கிய சூரியவன்ஷி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது வருகையைப் பதிவு செய்தார். சில நாட்களுக்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து, டி20 மற்றும் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையை முறியடித்தார்.
அவரது சாதனைகளின் உச்சம் 2026 பிப்ரவரியில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் வெளிப்பட்டது. ஏழு போட்டிகளில் 439 ரன்கள் குவித்த அவர், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு வரலாற்று இன்னிங்ஸை ஆடினார். வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 அசாத்திய சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்து, இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறக் காரணமானார். இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். இந்த அரிய சாதனைக்காக அவருக்கு இந்திய குடியரசுத் தலைவரால் ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது. மேலும் ஜூன் 2026 இல் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜாம்பவான்களின் பார்வையில் சூரியவன்ஷி
மைதானத்திற்கு வெளியே பிரியாணி மற்றும் இனிப்புகளை விரும்பி உண்ணும் ஒரு சாதாரண சிறுவனாகவும், மைதானத்திற்குள் நுழைந்ததும் பந்துவீச்சாளர்களைப் பந்தாடும் அதிரடி வீரராகவும் விளங்கும் சூரியவன்ஷியின் இந்த பன்முகம் சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் (AB de Villiers) மற்றும் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் (Dale Steyn) ஆகியோர் தங்களது யூடியூப் பக்கத்தில், இந்த இளம் வீரரை “அச்சமற்றவர் மற்றும் துணிச்சலானவர்” என்று பாராட்டியுள்ளனர். பந்துவீச்சாளர்களின் உத்திகளைத் தவிடுபொடியாக்கும் திறன் இவரிடம் உள்ளதாக டி வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சூரியவன்ஷி இந்திய ‘ஏ’ அணியில் சேர்க்கப்பட்டதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். இதுபோன்ற கடினமான சூழல்களில் விளையாடும் அனுபவமே அவரை எதிர்காலத்தில் மூத்த இந்திய தேசிய அணியில் விளையாட தகுதியுடையவராக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேர் டான் பிராட்மேனுடன் ஓர் பார்வை
விளையாட்டு ஆய்வாளர்கள் இத்தகைய அசாத்திய திறமையாளர்களை வரலாற்று ரீதியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கிரிக்கெட் உலகம் கண்ட மிகச் சிறந்த பேட்ஸ்மேனான சேர் டான் பிராட்மேனின் (Sir Don Bradman) நினைவே நம் அனைவருக்கும் எழுகிறது.
நவீன கால டி20 அதிரடி ஆட்டக்காரரை, 20 ஆம் நூற்றாண்டின் பாரம்பரிய டெஸ்ட் ஜாம்பவானுடன் ஒப்பிடுவது சற்று வியப்பாக இருந்தாலும், இருவருக்கும் இடையே உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால், கிரிக்கெட்டின் தற்போதைய ரன் குவிக்கும் முறைகளை முற்றிலும் மாற்றி அமைத்ததே ஆகும். பிராட்மேன் தனது அசாத்திய திறமையால் 99.94 என்ற சராசரியைக் கொண்டு மற்ற வீரர்களிடமிருந்து தனித்து நின்றார். சூரியவன்ஷியும் தனது இளம் வயதிலேயே அசாத்திய ரன் குவிக்கும் வேகத்தின் மூலம் அதேபோன்ற ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிராட்மேன் தனது சிறு வயதில் ஒரு சிறிய கோல்ஃப் பந்தை ஸ்டம்ப் மூலம் சுவரில் அடித்து தனது கண் மற்றும் கைகளின் ஒருங்கிணைப்பை மெருகேற்றினார். அதேபோல், சூரியவன்ஷியும் தனது கிராமத்து கொல்லைப்புறத்தில் வளர்ந்த வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு தனது பேட்டிங் திறனை வளர்த்துக் கொண்டார்.இருப்பினும், பிராட்மேன் தரையோடு தரையாக நேர்த்தியாக ரன்களைக் குவித்த இடத்தில், சூரியவன்ஷி பந்துகளை வானத்தில் பறக்கவிடும் நவீன கால அதிரடியைப் பிரதிபலிக்கிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையையும், ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 11 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரரின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார். பிராட்மேன் தனது அசைக்க முடியாத நிலைத்தன்மையால் கிரிக்கெட்டை மாற்றியமைத்தார்; சூரியவன்ஷி காலத்தைக் சுருக்கி, ஒரு மூத்த பேட்ஸ்மேன் தனது 25 வயதில் எட்ட நினைக்கும் முதிர்ச்சியைத் தனது 14 வயதிலேயே சாதித்துக் காட்டியுள்ளார்.
காலி மற்றும் தம்புள்ளை மைதானங்களில் அவர் தனது அடுத்த இன்னிங்ஸிற்குத் தயாராகும் வேளையில், கிரிக்கெட் உலகம் இந்த இளம் புயலின் ஆட்டத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறது.

